ஆனந்தக்களிப்பு

ஆனந்தக் களிப்பு
சங்கர சங்கரசம்பு சிவசங்கர சங்கர சங்கரசம்பு
சங்கரசங்கரசம்பு
1
தொண்ணூற் றறுவர்கள் கூட்டம்
பிடி
சோறுகுறைந்திடில் வந்திடும் வாட்டம்
உண்ணக்கிடைத் தாற்கொண்டாட்டம்
எமன்
ஓலைவந்திட்டா லெடுப்பார்களோட்டம்
(சங்கர)
2
பின்னமாஞ் சோற்றுத்துருத்தி
நாய்கள்
பிய்த்துப்பிடுங்கிடுங் கொத்தைப்பருத்தி
பன்னாளுமோயாப்ரவர்த்தி
உற்றுப்
பார்த்தாற்றெரி யுமனதைநிறுத்தி
(சங்கர)
3
மாயப்பசுவாழுங் கொட்டில்
புல
வம்பர்களை வர்முடக்கிடுங்கட்டில்
பேய்மனமாடிடுந் தொட்டில்
நிலை
பேசப்படாதேயரை நொடிமட்டில்
(சங்கர)
4
உற்றாருமுள்ளா ருஞ்சாவார்
நம
தொண்டொடியார்களு மக்களுஞ்சாவார்
பெற்றோரு மற்றோருஞ்சாவார்
நாமும்
பின்னேயிருந்தேங் கியேங்கியேசாவோம்
(சங்கர)
5
உடக்கான வோட்டையுருவம்
இத்தை
உற்றுப்பார் நெஞ்சேயுனக்கென்னகர்வம்
கடக்கவிதுவே பருவம்
நமன்
கண்டித்தாற் செத்துப்பிறந்துவருவம்
(சங்கர)
6
ஆடிடும்பாவையை யொப்பு
புல
ஐந்துகுரங்குகள் வாழ்ந்திடுங்கொப்பு
ஓடுங் காமப்பண்டம்வைப்பு
அதை
உண்டென்று நம்புவதே பெருந்தப்பு
(சங்கர)
7
தங்கத்தை மாற்றாகச்சேர்த்துத்
தரை
தன்னிலழுத்திக் குடியிருந்தாலும்
துங்கப்ரமனோலை வந்தால்
உங்கள்
தங்கப்பனாலே தடுக்கக்கூடாதே
(சங்கர)
8
ஜீவனுஞ்சித்துமே யொன்று
அந்தச்
சித்தைநிறைத்திடப் பார்ப்பதேநன்று
சாவதும் வாழ்வதும் நின்று
இதைச்
சற்குருவாலே பெறுவதுமென்று
(சங்கர)
9
காமப்பசாசேறும் பீடம்
பாவ
கன்மவினைப்பேய்கள் வாழ்ந்திடுமாடம்
தீமைகள் செய்வதேபாடம்
மல
தேகத்தைப் போலேயுண்டோமுழுமூடம்
(சங்கர)
10
வஞ்சகரோடு கூடாதே
பொல்லா
மாரிசமாகிய வேஷமெடாதே
கஞ்சத்தனத்தை யடாதே
பாழுங்
கட்டையை மெய்யென்று நம்பப்படாதே
(சங்கர)
11
இரண்டுகால் நாட்டியவீடு
மேலே
இரண்டுகொடுங்கை வைத்தான்மலக்கூடு
உண்டென்று நம்பினாற்கேடு
உன
துள்ளுள்ளேயாடிடுஞ் சித்தனைத்தேடு
(சங்கர)
ஆனந்தக் களிப்பு முற்றிற்று